A+ A-

ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷால் பேட்டி

ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷால் பேட்டி


தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சென்னை தியாகராய நகரில் நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், நடிகர்கள் எஸ்.வி.சேகர், பசுபதி, ராம்கி, நடிகைகள் லலித குமாரி, சங்கீதா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.

முன்னதாக நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு வந்த விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்கத்திடம் ரூ.48 லட்சம் இருப்பு இருந்தது. மேலும் ரூ.2 கோடி கடன் வாங்கி மொத்தம் ரூ.2 கோடியே 48 லட்சம் செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம்.



தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.

இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரை உலகினரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது, கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். என்று விஷால் கூறினார்.