A+ A-

நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை


Hydrogen Bomb vs. Atomic Bomb
திங்கள் , ஏப்ரல் 25,2016

நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத திட்டங்கள்


வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. ஆனாலும், உலக நாடுகளின் எதிர்ப்பையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்த வடகொரியா, கடந்த ஜனவரி மாதம் முதல்முறையாக அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்து உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம், ஐ.நா. சபை அந்த நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வடகொரியா கைவிட வில்லை.

நீர்மூழ்கி ஏவுகணை


இந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அந்த நாட்டின் கே.சி.என்.ஏ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் வழிநடத்துதலில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.

இது ஆத்திரமூட்டும் செயல் என கூறி அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி ரி சு யாங், கூறியதாவது:-
தென் கொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வருகிற கூட்டு போர் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டால், நாங்களும் எங்கள் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்வோம்.

நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்கு அணு ஆயுத திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்காதான் காரணம்.

தென் கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி விட்டால் பேச்சு வார்த்தைக்கான கதவு திறக்கும். பதற்றம் தணியும்.

கூட்டு போர் பயிற்சி சில காலத்துக்கோ, ஆண்டுகளுக்கோ நிறுத்தப்பட்டால், இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். இது ஒட்டுமொத்த உலகத்துக்கே நல்லதாக அமையும்.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.