A+ A-

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

olympic torch


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அரங்கேறுகிறது. இந்த போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த தீபமானது சூரிய ஒளியை குவி லென்சில் குவித்து அதில் இருந்து உருவாகும் ஜூவாலை மூலம் ஏற்றப்பட்டது. கிரேக்க நடிகை கேத்ரினா லிஹோ, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் புடை சூழ ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
ஒலிம்பிக் தீபத்தை முதல் நபராக கிரீஸ் நாட்டை சேர்ந்த உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பெட்ரோனியாஸ் ஏந்தி சென்றார். அதன் பிறகு அது தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த தீபம் கிரீஸ் நாட்டில் 6 நாட்கள் பயணம் செய்யும். அதன் பிறகு பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். சுவிட்சர்லாந்து நாட்டில் சில நாட்கள் இருக்கும் ஒலிம்பிக் தீபம் மே 3-ந் தேதி பிரேசிலை சென்றடையும். 
 
ஒலிம்பிக் தீபத்தை மொத்தம் 12 ஆயிரம் பேர் ஏந்தி ஓட இருக்கிறார்கள். பிரேசிலில் 26 மாநிலங்களை சேர்ந்த 329 நகரங்களில் இந்த தீபம் வலம் வருகிறது. கடைசியாக ஒலிம்பிக் தீபம், தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தை சென்றடையும். அங்குள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்தை ஏற்றி வைக்கும் கவுரவம் யாருக்கு அளிக்கப்படும் என்பது கடைசி நேரத்தில் தான் அறிவிக்கப்படும்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அரங்கேறுகிறது.