A+ A-

திருப்பூரில் நள்ளிரவில் வாகன சோதனை: 3 கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி சிக்கியது


container-trucks
தமிழக சட்டசபைக்கு நாளை மறுநாள் (16–ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 100 கோடி வரை பணம் சிக்கியிருக்கிறது. எனவே தேர்தல் நெருங்கு விட்டதால் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெறும் என்பதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் துணை ராணுவத்தினர் நள்ளிரவு 12.20 மணியளவில் கோவை–பெருமாநல்லூர் ரோடு குன்னத்தூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது கோவை சாலையில் இருந்து ஒரு சொகுசு காரை தொடர்ந்து 3 கண்டெய்னர் லாரிகள் அதற்கு பின்னால் 2 சொகுசு கார்கள் வந்தது. சந்தேகம் அடைந்த பறக்குடை படையினர் அந்த கார் மற்றும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அவை சென்றது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த கண்டெய்னர் லாரிகளை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று செங்கப்பள்ளி என்ற இடத்தில் மடக்கினர்.

பறக்கும் படையினர் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அந்த நேரத்தில் கண்டெய்னர் லாரிக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த சொகுசு காரில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் பறக்கும் படை அதிகாரிகளிடம் கோவையில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கண்டெய்னர்களில் பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், துணை கமிஷனர் திஷாபட்டேல் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முகம் ஆகியோர் செங்கப்பள்ளி பகுதிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 3 கண்டெய்னர் லாரிகளையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.570 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது 3 சொகுசு காரில் வந்தவர்களும் தாங்கள் ஆந்திரா போலீஸ் என்றும் கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் பணம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும் தெரிவித்து சில ஆவணங்களை காட்டினர்.

ஆனால் அந்த ஆவணங்களில் தேதி தவறாக இருந்தது. மேலும் போலீசார் என்று சொன்னவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை.

இதையடுத்து ரூ. 570 கோடியுடன் 3 கண்டெய்னர் லாரிகளும், அதோடு வந்த 3 சொகுசு கார்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு 3 கண்டெய்னர் லாரிகளை சுற்றியும் தடுப்பு அமைத்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com

தமிழக சட்டசபைக்கு நாளை மறுநாள் (16–ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.